இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 45-51
அக்காலத்தில்
பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, “இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டு கொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்” என்றார்.
அதற்கு நத்தனியேல், “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார்.
நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்தி மரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார்.
நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார்.
அதற்கு இயேசு, “உம்மை அத்திமரத்தின் கீழ்க் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார்.
மேலும், “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
புனித பர்த்தலமேயு – திருத்தூதர் விழா – மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 24)
இன்று திருச்சபையானது திருத்தூதரான தூய பார்த்தலமேயுவினுடைய விழாவைப் பெருமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்கின்றது. விவிலியத்தில் இவரைப் பற்றிய செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் திருத்தூதர்களுடைய அட்டவணைப் பகுதியிலும், யோவான் நற்செய்தி முதல் அதிகாரத்திலும் (யோவா 1:43-51) திருத்தூதர் பணிகள் நூல் முதல் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைகிறபோதும் வாசிக்கின்றோம்.
உழுதநிலத்தின் மகன்’, ‘நத்தனியேல்’ என்று அழைக்கப்படக்கூடிய இவரைக் குறித்துத்தான் ஆண்டவர் இயேசு, “இவரே உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் (யோவா 1:47) என்று குறிப்பிடுகிறார். கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த தூய ஜெரோம் குறிப்பிடும்போது, “ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பிறகு இவர் இந்தியாவிலுள்ள கொங்கணம் கடற்கரைப் பகுதியிலும், மும்பை கடற்கரைப் பகுதியிலும் நற்செய்தி அறிவித்துவிட்டு, அங்கிருந்து அர்மேனியா சென்று, அங்கே நற்செய்தி அறிவிக்கும்போது மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்” என்று கூறுவார். மைக்கேல் ஆஞ்சலோ ரோம் நகரில் இருக்கக்கூடிய சிஸ்டைன் பேராலயத்தில் வரைந்த ஓவியத்தில் தூய பார்த்தலமேயு உடலிலிருந்து உரிக்கப்பட்ட தன்னுடைய சதையைத் தாங்கி நிற்பது போன்ற படம் வரையப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
இவருடைய விழாவைக் கொண்டாடுகிற வேளையில் இவர் நமக்கு என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
முதலாவதாக தூய பார்த்தலமேயு இயேசுவின் மீது கொண்ட அளவுகடந்த அன்பால், நற்செய்தி அறிவிப்பிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க முன்வருகிறார். “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்று அர்மேனியாவில் நற்செய்தி அறிவித்தார். அப்படி நற்செய்தி அறிவிக்கும்போது அர்மேனியா நாட்டு மன்னன் பொலிமியுஸ் நற்செய்தியால் தொடப்பட்டு, தூய பார்த்தலமேயுவிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். ஆனால் இது பிடிக்காத மன்னனின் சகோதரன் அஸ்தியாஜெஸ் என்பவர் இவரை உயிரோடு தோலுரித்து, சிலுவையில் தலைகீழாக அறைந்து கொன்று போட்டான்.
நற்செய்தி அறிவிக்கின்றபோது புனிதர் அனுபவித்த துன்பத்தைப் போன்று நாமும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கலாம். ஆனால் கிறிஸ்துவின் அன்பு நம்மை எந்நாளும் காத்துக்கொள்ளும் என்பதில் நாம் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்.
பவுலடியார் உரோமையருக்கு எழுதிய மடல் 8:35 ல் கூறுவார், “கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்ககூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும் என்பார். ஆம் கிறிஸ்துவின் அன்பு நம்மையெல்லாம் காத்து வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தால் எவ்வகை சவாலையும் நாம் துணிவோடு எதிர்கொள்ளலாம்.
தூய பார்த்தலமேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளகூடிய இரண்டாவது பாடம் கள்ளம், கபடற்றவர்களாய் வாழ்வதுதான். ஆண்டவர் இயேசு இவரைக் குறித்து கள்ளம் கபடற்றவர் என்று சொன்னார் என்றால் நிச்சயம் இவர் குழந்தையைப் போன்று தூயவராக, தூய மனத்தினராக வாழ்ந்திருக்கவேண்டும். மத் 5:8 ல் வாசிக்கின்றோம், “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பார்கள்” என்று. ஆம் தூய மனத்தோரால்தான் கடவுளை முழுமையாகக் காண முடியும்.
மேலும் இங்கே கள்ளம் கபடற்ற உள்ளம் அல்லது தூய உள்ளம் என்பதை, பிறர் துன்பத்தைக் கண்டு இரங்கிடும் உள்ளம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம். நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்யும்போது ஒரு சிறுவன்தான் முதலில் மனமிரங்கி தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொடுக்க முன்வருகிறான். அவன் மக்கள்மீது மனமிரங்கி இருக்கலாம். இதைபோன்று தூய பார்த்தலமேயுவும் புன்புறும் மக்களைக் கண்டு மனமிரங்கி உதவி இருக்கவேண்டும்.
ஒரு கற்பனைக் கதை. கணவன், மனைவி ஒரே ஒரு குழந்தை என்றிருந்த அழகான வீட்டிற்கு தந்தைவழி தாத்தா வந்தார். பேரனுடன் தங்கி இருந்து, தன் கடைசி நாட்களைக் கழிக்க ஆசைகொண்ட அவருக்கு கண்கள் சரியாகத் தெரியவில்லை. கைகளும் பொருட்களை எடுக்கையில் நடுக்கம் கொண்டன. அந்த அளவுக்கு முதுமையின் தாக்கத்துடன் அவர் இருந்தார்.
ஒருநாள் இரவுஉணவின்போது வீட்டில் எல்லாரும் ஒன்றாக, மேசையில் அமர்ந்து உணவு உட்கொள்ளும்போது தாத்தா கரண்டியை கையில் எடுக்கையில் கைதவறி கரண்டி கீழே விழுகிறது. பால் குடிக்க கோப்பையைப் பிடிக்கையில் கை நடுக்கத்தில், பால் மேசை விரிப்பில் சிந்தி விடுகிறது. அவர் உணவு உண்ணும் போதும் உணவும் கீழே சிந்துகிறது. இதனால் கணவனும், மனைவியும் எரிச்சல் அடைந்தனர். தொடர்ந்து தாத்தாவை பொறுத்துக் கொள்ள முடியாத அவர்கள், தங்களுடைய மேசையில் அவரை அமர வைக்காமல் ஓரமாய் அவருக்கென்று ஒரு தனி மேசையில் சாப்பிட வைத்தனர். அவர் சாப்பிடும் பாத்திரம் கீழே விழுந்து உடையாமல் இருக்க மரத்தால் ஆன பாத்திரங்களில் உணவு கொடுத்தனர்.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன. நடக்கும் அத்தனை விஷயங்களையும் பேரன் அமைதியாய் பார்த்துக்கொண்டே இருந்தான். எல்லாரும் ஒன்றாக அமர்ந்துச் சாப்பிட, தாத்தா மட்டும் தனி மேசையில் சாப்பிட்டு வந்தார். தான் ஒதுக்கப்பட்டு விட்டோம் என்ற ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது.
ஒரு நாள் அந்த வீட்டுக்குழந்தை (தாத்தாவின் பேரன்) மரத்துண்டுகளை வைத்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனுடைய தந்தை மகனிடம், “தம்பி என்ன விளையாடுறிங்க?” என்று அன்பாய் கேட்டார். அதற்கு குழந்தை, “நான் இந்த மரத்துண்டுகளை வைத்து 2 பாத்திரங்கள் செய்கிறேன்பா. நான் பெரியவன் ஆனதும் உங்களுக்கும், அம்மாவுக்கும் சாப்பிட கொடுக்க வேண்டுமல்லவா. அதற்குத் தான் இது” என்று ஒருபோடு போட்டது. தந்தையால் பேச முடியவில்லை. கண்கள் கண்ணீரில் ததும்பியது. தான் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. குற்ற உணர்ச்சி மேலிட்டவராய் மறுநாளிலிருந்து தாத்தாவுக்கும் அவர்கள் அமரும் மேசையிலே உணவு பரிமாறப்பட்டது. பக்கத்திலேயே நின்று தாத்தா சாப்பிடும் வரை அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.
குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மைக் கூர்ந்து கவனிக்கிறார்கள்; கள்ளம் கபடற்ற தங்களது உள்ளத்தில் பிறரது துன்பத்தைக் கண்டு இரங்கும் மனத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
ஆகையால் தூய குழந்தைகளைப் போன்று; புனித பார்த்தலமேயுவைப் போன்று கள்ளம் கபடரற்ற மனத்தினராய், பிறருக்கு இரங்கும் உள்ளத்தினராய் வாழ்ந்து, இயேசுவின் நற்செய்தியை அறிவிப்போம். இறையருள் பெறுவோம்.
Source: New feed