இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்று நாம் திருஅவையோடு இணைந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடி கொண்டிருக்கிறோம். எனவே உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்கி மகிழ்கிறேன்.
ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்திலே மிகவும் கொடூரமான ஒரு மனிதன் இருந்தான். உலகத்தில் சொல்லக்கூடிய அத்தனை தீய பழக்கங்களையும் கொண்டிருந்தவன். அவன் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தான். அதே காட்டுப்பாதையில் எதிர்முனையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணும் நடந்து வந்தாள். நடுக் காட்டை அடைந்தபோது அவளுக்கு பேறுகால வலி வந்தது. துடிதுடித்தவளாய், என்ன செய்வது? என்று தெரியாமல் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமைதியின்றி நிலை தடுமாறி விழுந்தாள். பிரசவ வலி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தாள். யாராவது வந்து நம்மை காக்க மாட்டார்களா? என்ற நினைப்போடு வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் கண்ணில் பட்டது, இந்த சமூகத்தால் அயோக்கியன் என கருதப்பட்ட அந்த கொடூர மனிதன் மட்டுமே. இவனையா நான் பார்க்கவேண்டும்! இவன் எப்படி எனக்கு உதவி செய்வான் என்று அந்த பெண்ணின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஒருபுறம். மறுபுறமோ வலியும் வேதனையும். துடிதுடித்துக் கொண்டிருந்தாள். அவ்வழியே வந்த அந்த கொடூர குணம் கொண்டவன் அந்தப்பெண்ணின் அருகில் வந்து நின்றான். அவள் துடிப்பதை சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு அவன் அந்த பெண்ணின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய கைலியை எடுத்து அந்த பெண்ணின் மீது விரித்தான். இதற்கு முன்பு வரை அவன் அவ்வாறு செய்ததே கிடையாது. இவனுக்கு இதெல்லாம் பழக்கமே கிடையாது. இருந்தபோதும், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தான். குழந்தையை கையில் எடுத்தான். தான் கையில் எப்போதுமே வைத்திருக்கக்கூடிய கூரிய கத்தியை எடுத்து, தொப்புள் கொடியை வெட்டினான். இதற்கு முன்பு வரை இவன் அப்படி செய்ததே கிடையாது. ஆனால் அதை அன்று அவன் செய்தான். அதன் பிறகு தாய் அரை மயக்கத்தில் முனங்கிக் கொண்டிருக்கும் போது, ஓடிச்சென்று அருகிலிருந்த ஒரு குட்டையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்தான். அந்த தாயின் வாயில் அந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்தான். அவளது கை சட்டையை சற்று விலக்கி குழந்தைக்கு உணவருந்தும் வகையில் அந்த குழந்தையை அப்பெண்ணின் மார்பகம் பக்கம் வைத்தான். இத்தகைய கதையை எழுதிய வால்ட் விட்மன் என்ற ஆசிரியர், இந்த கதைக்கு மனிதன் பிறந்தான் எனப் பெயரிட்டார். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுமே மரணம் என்ற ஒன்றை சந்தித்தே தீர வேண்டும். மரணத்தை சந்திக்கின்றன தருணம் நமது வாழ்வு முடிந்து விடுவது அல்ல. மாறாக வாழ்வு துவங்குகிறது. மரணம் விண்ணகத்தின் திறவுகோல் என்று கூறுவார்கள். இந்த உலகம் என்பது ஒரு மாயை. நாமெல்லாம் பயணிகள் போல இங்கு வந்தோம். நாம் வந்ததன் நோக்கம் என்னவென்று தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறோம். ஒருநாள் இந்த மண்ணகத்தை விட்டு நமது உயிரானது பிரிந்து செல்லும். அப்போது நாம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வோம் என்ற வகையில், இறைவனிடம் சென்று சேருவோம் என்று இலக்கியங்கள் கூறுவார்கள்.
Source: New feed