திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புனித வாரத்தில் நிறைவேற்றும் திருவழிபாடுகளில் பங்குகொள்வதற்காக, இந்நாள்களில் உரோம் பெருநகரம் திருப்பயணிகளால், குறிப்பாக, இளையோரால் நிரம்பி வழிகின்றது. காலநிலையும் அதற்குக் கைகொடுக்க, ஏப்ரல் 13, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் துவக்கிய மறைக்கல்வியுரையைக் கேட்டு, ஆசிர்பெறுவதற்காக வந்திருந்த திருப்பயணிகள் கூட்டமும், அந்த அரங்கத்தையே நிறைத்திருந்தது. இயேசு தம் பாடுகள், மரணம் மற்றும், உயிர்ப்பினால் கொண்டுவந்த பாஸ்கா அமைதி பற்றிய தன் சிந்தனைகளை திருத்தந்தை வழங்குவதற்குமுன், அமைதி குறித்து இயேசு கூறியுள்ள, யோவான் நற்செய்தி, இயல் 14, திருவசனம் 27, முதலில் வாசிக்கப்பட்டது.
அந்நேரத்தில் இயேசு கூறியதாவது: அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம் (யோவா.14,27). அதற்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையைத் தொடங்கினார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். குருத்தோலை ஞாயிறிலிருந்து, உயிர்ப்பு ஞாயிறு வரையுள்ள புனித வாரத்தின் மத்தியில் நாம் இருக்கிறோம். இவ்விரு ஞாயிறுகளிலும் சிறப்பிக்கப்படும் விழா, இயேசுவை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளது. ஆயினும் அவையிரண்டும் வித்தியாசமான விழாக்கள் ஆகும். இந்தப் புனித வாரத்தில், திருஅவை, நம் ஆண்டவரின் திருப்பாடுகள், மரணம், மற்றும் உயிர்ப்பைக் கொண்டாடுகிறது. கடந்த ஞாயிறன்று, கிறிஸ்து வெகு ஆடம்பரமாக எருசலேமில் நுழைந்ததையும், மெசியாவாக அவர் வரவேற்கப்பட்டதையும் நினைவுபடுத்தினோம். அச்சமயத்தில் அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்ற மக்கள், தங்கள் மேலுடைகளை வழியில் விரித்தனர் (காண்க.லூக்.19:36), மற்றும், மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர் (காண்க.மத்.21:8). “ஆண்டவர் பெயரால் அரசராய் வருகிறவர் போற்றப் பெறுக! விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” (லூக். 19: 38) என்று உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழ்ந்தனர். இயேசு எருசலேமில் நுழைந்த இந்நிகழ்வை, அமைதி மற்றும், மாட்சியைக் கொணரும் ஒரு புதிய அரசரின் வருகையாக அம்மக்கள் பார்த்தனர். எருசலேமை உரோமையரின் ஆக்ரமிப்பிலிருந்து விடுதலைசெய்யும் மாட்சிநிறை அமைதியைக் கொண்டுவரும் மெசியாவாக அவரைப் பார்த்து, பெருமகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தனர். ஆயினும், இயேசு கொணர்ந்த அமைதி, இவ்வுலகின் யுக்திகளின்படியானது அல்ல. மாறாக, அவர் கொணர்ந்த அமைதி, வன்முறையை நாடாதது. அவ்வமைதி, அவரை சிலுவை மரணத்திற்கு இட்டுச்சென்ற கனிவு மற்றும், மனத்தாழ்மை ஆகியவை வழியாகக் கொண்டுவந்ததாகும். கிறிஸ்து, நம் பாவங்களுக்காக இறந்ததன் வழியாக, அவர் நம்மைச் சுதந்திரமுள்ள பிள்ளைகளாக ஆக்கினார். இயேசு அமைதியை உருவாக்க தம் வல்லமையைப் பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக, அவர், தனிமனிதரின் சுதந்திரத்தை மதித்து அதைக் கொணர்ந்தார் என்றே, அவரை கேள்விகேட்ட தலைமைக்குரு குற்றம்சாட்டினார் என்று, The Brothers Karamazov என்ற தனது புதினத்தில் Dostoyevsky அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில், இயேசு கொணர்ந்த அமைதியில், ஆயுதங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அவர் அமைதியைக் கொணர, இறைவேண்டல், கனிவு, மன்னிப்பு, பிறரன்பு, மற்றும், அடுத்திருப்பவரைச் சுதந்திரமாக அன்புகூர்தல் ஆகிய நற்செய்தியின் ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தினார். இவ்வாறுதான் கடவுளின் அமைதி, இவ்வுலகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதனால்தான், ஒவ்வொரு போர் போன்று, இந்நாள்களில் இடம்பெறும் ஆயுதத் தாக்குதல், கடவுளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுஞ்செயலைக் குறிக்கின்றது. இது, ஆண்டவரின் பாஸ்காவைப் புறக்கணிக்கும் தெய்வநிந்தனைச் செயலாகும். அவரின் பலவீனமானவர்களைப் பறக்கணித்து, இவ்வுலகின் போலியான முகத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாகும். போர் எப்போதும் ஒரு மனிதச்செயல், இது அதிகாரத்தை வணங்கச்செய்வது பற்றியதாகும். கிறிஸ்து கொணர்ந்த அமைதி, உயிர்ப்பின் அமைதியாகும். இந்த அமைதி, வரலாற்றையும், அதை ஏற்கின்ற அனைத்து இதயங்களையும் மாற்றுவதாகும். அன்புச் சகோதரர், சகோதரிகளே, இப்புனித வாரத்தில், நம் அமைதியின் நல்ஊற்றாகிய சிலுவையில் அறையுண்டு உயிர்த்த கிறிஸ்துவிடம் நம்மை அர்ப்பணிப்போம். அவருக்கு மிக நெருக்கமாகச் செல்வோம். நம் இதயங்களிலும், உலகிலும் அமைதி எனும் அவரது கொடையை அருளுமாறு மன்றாடுவோம்.
இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாக் கொண்டாட்டம், நமக்கு அருளின் மற்றும், புதுப்பித்தலின் காலமாக அமையட்டும் எனக் கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார்
Source: New feed