மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திருஇருதயம்.
பூங்காவனத்தில் நமது மீட்புக்காகத் தமது பிதாவுக்குத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இரட்சகரான சேசுவின் திருஇருதய அன்பர்கள் தாங்கள் அவர்பேரில் வைத்த அன்பால் ஏவப்பட்ட நினைவின் வழியாய் பூங்காவனத்தில் நுழைந்து, அவருக்கு ஆறுதல் வருவிக்க ஆசைப்படுவார்கள். இந்த ஒலிவேத்மலைத் தோட்டத்தில் விசேஷமாய் சேசுவின் திருஇருதயமானது தாம் மனிதர்கள் பேரில் வைத்த அணைகடந்த அன்பைக் காண்பிக்கிறது.
சேசு மனிதர்களுடைய பாவங்களையெல்லாம் தமது மேல் சுமந்து கொண்டு தமது பிதாவின் கோபத்தை குறைத்து மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ண அவருக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணங்குகிறார். அச்சமயம் அவருடைய திருஇருதயமானது சகிக்க முடியாத துக்கத்தில் மூழ்கியது. அகோரமான கோபத்தோடும், தளராத நீதியோடும், பயம் வருவிக்கக்கூடிய தோற்றத்தோடும், தமது பிதாவை தமக்கு முன்னால் இருப்பதாக பார்க்கிறார். துரோகியான யூதாஸென்பவன் தம்மை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறதையும், கொடிய யூதர்கள் தமது மாமிசத்தைக் கிழித்துத் தம்மைச் சிலுவையில் அறைகிறதையும், தம்முடைய அப்போஸ்தலர்களும் சீடர்களும் தமது விரோதிகளின் கையில் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போகிறதையும், கடைசியாய் இலட்சக்கணக்கான ஆத்துமங்கள் தமது பாடுகளால் யாதொரு பலனடையாமல் தாம் காண்பிக்கும் அன்பை சற்றும் உணராதவர்களாய் என்றென்றைக்கும் தண்டனைக்குள்ளாகப் போகிறதையும் கண்டார். இந்தக் காட்சிகளானது அவருடைய அன்பு நிறைந்த திரு இருதயத்துக்குப் பொறுக்க முடியவில்லை . அதனால் உடல் முழுவதும் இரத்த வியர்வையினால் நிரம்ப தரையில் முகங்குப்புற விழுகிறார்.
திவ்விய சேசுவை இந்த நிலையில் காண்கிற நம்முடைய இருதயமானது பாவத்தை முழுவதும் அவருவருத்துத் தள்ள வேண்டும். பாவியின் வடிவில் மனிதர் பாவங்களைத் தமது பேரில் சுமந்துகொண்ட தமது பரிசுத்த குமாரனை பிதாவானவர் இவ்வளவு கொடுமையாய் நடப்பித்திருக்க பல பாவங்களைக் கட்டிக்கொண்டிருக்கிற நாம் அந்தப் பாவங்களுக்கு இவ்வுலகத்தையே பரிகாரம் பண்ணாவிட்டால் தேவநீதி நம்மைக் கொடூரமாய் நடத்தும்!
சோதனை நேரத்திலும் துன்பவேளையிலும் நாம் நம்பிக்கையோடும் தேவ விருப்பத்திற்கு அமைந்த மனதோடும், மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திரு இருதயத்தின் மாதிரியாக அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று திவ்விய சேசு மரண வேதனைப்படுகிற சமயத்தில் தமது பிதாவை நோக்கி : அப்பா தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் என்று கூறினார். அர்ச். மாற்கு 14:36)
நமது சோதனை வேளையில் திவ்விய சேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி, நம்முடைய துன்பங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்முடைய சிலுவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவரை நோக்கிக் கேட்கும்போது, திவ்விய சேசுவைப்போல், (பிதாவே! உமது விருப்பப்படி நிகழட்டும், என் விருப்பப்படி நிகழவேண்டாம். உமது சித்தப்படியே ஆகக்கடவது. என் மனதின் படி ஆகவேண்டாம்.) என்று நாமும் சொல்லவேண்டும். திருச்சபைத் துவக்கத்தில் முன்னூறு வருடமௗவாய் மறைசாட்சிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தும்படி சேசுக்கிறிஸ்துநாதர் விரும்பினார் அவ்வளவு வேதனையை திவ்விய சேசு நம்மிடம் இப்போது கேட்கிறதில்லை. நம்முடைய பாவங்களுக்கு நாம் செய்கிற பரிகாரத்தாலும், மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றித்து நம்மை முழுவதும் ஆத்தும் மீட்புக்கு கையளிப்பதினாலும் நாம் வேதசாட்சிகளாகும்படி ஆசிக்கிறார்.
கசப்பான கிண்ணக் கடைசித்துளிவரை குடிக்கத் தீர்வையிட்டார்” என்று திருவுளம் பற்றிய பின்னர், அர்ச். மார்க்கரீத் மரியம்மாள் ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்து போது சேசு அவருக்குத் தோன்றி, அர்ச். மார்க்கரீத் மரியாளை நோக்கி : “மகளே, நாம் பூங்காவனத்தில் முழுமனதோடு அனுபவித்த மரண வேதனையை நீயும் வியாழக்கிழமை இரவுதோறும் அனுபவிக்கும்படி செய்வோம். ஆதலால் நமது பிதாவுக்கு நாம் ஒப்புக் கொடுத்த அந்தத் தாழ்ச்சி நிறைந்த ஜெபத்தில் நீயும் நம்மோடு ஒன்றிக்கும்படியாக நள்ளிரவு பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் எழுந்திருந்து மனிதருடைய பாவங்களை ஆண்டவர் மன்னித்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், தேவகோபத்தை குறைக்கும்படியாகவும் நீ தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவாயாக! நமது அப்போஸ்தலர்கள் நம்மைவிட்டு ஓடிப்போனது நமக்கிருந்த தவிப்பை நீ சிறிதளவாவது தணியச் செய்வாய்.
இதனாலேதான் நம்மோடுகூட ஒரு மணி நேரமுதலாய் விழித்திராதினிமித்தம் அவர்களைக் கண்டிக்கும்படி நேரிட்டது” என்று சொல்லி மறைந்தருளினார்.
சுமார் 120 வருடங்களுக்கு முன் புனித தன்மையிலும் சேசுவின் திருஇருதயப்பக்தியிலும் மிகவும் சிறந்து விளங்கின லியோனார்து என்னும் ஒரு சேசுசபைக் குரு இருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டினர். தமது திவ்விய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை மீட்க தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்விய சேசுவின் திரு இருதயத்தை நோக்கி இந்தப் பரிசுத்த குருவானவர் மிகுந்த பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டிருந்தார். அப்போது, திவ்விய சேசு தமது திரு இருதயத்திற்கு மிக்க மகிழ்ச்சியும், ஆத்துமாக்களுக்கு மிக்க பிரயோசனமுமான ஒரு சபையை ஏற்படுத்தும்படியும், அச்சபை கீழே கூறப்படும் இரண்டு கருத்துக்களுக்காக ஏற்படுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்தார். முதலாவது, வாழ்நாள் முழுவதும் விசேஷமாய்ப் பூங்காவனத்தில் மனித மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட தமது திவ்விய இருதயத்துக்கு வணக்கம் வருவித்தல். இரண்டாவது இலட்சக்கணக்காய் உலகமுழுவதிலும் சாகிற சகலருக்கும் நன்மரண வரம், மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திருஇருதயம் கொடுக்க இரந்து மன்றாடுதல்.
சேசுவின் திரு இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்த சேசுசபைக் குருவானவர் சில ஞானவேகமுள்ள மனிதர்களைக் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர்களெல்லோரும் ஒரு சபையாகச் சேர்ந்து பின்வரும் ஜெபத்தை ஜெபித்து வருகிறார்கள்.
“கருணாம்பர சேசுவே! ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய ஆராதனைக்குரிய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண துன்பதுயரங்களையும், உம்முடைய மாசில்லாத திருத்தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து இன்றுதானே பூமியில் எங்காவது அவஸ்தைப்பட்டு மரிக்கப்போகிற ஆத்துமங்களை உமது திவ்விய இரத்தத்தால் சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட சேசுவின் திருஇருதயமே! இன்று மரிக்கிற பாவிகளின் பேரில் இரக்கமாயிரும். ஆமென்.”
Source: New feed